கொரோனாவினால் இறந்த நபரின் சடலத்தினை வீட்டிற்கு கொண்டுவந்த உறவினர்களை அழைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு ராமசாமிக்கும், அவரது மனைவி பிச்சை அம்மாளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ராமசாமியின் உடலை அவரது மகன் முருகானந்தம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் பிச்சையம்மாள் இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து கொரோனா பாதிப்பினால் இறக்கவில்லை என்று உண்மையை மறைத்துள்ளனர்.
மேலும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை 12 நேரமாக கொரோனாவினால் உயிரிழந்தவரை அடக்கம் செய்யாமல் வைத்ததோடு, அடக்கத்திற்கு உறவினர்களையும், ஊர்காரர்களையும் அழைத்து ஊர்வலமாக கொண்டு சென்று இறுதி சடங்கினை முடித்துள்ளனர்.
பின்பு ராமசாமி கொரோனாவினால் உயிரிழந்தார் என்று தெரியவந்ததையடுத்து, ராமசாமி வீட்டிற்கு குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். முதலில் உண்மையை மறைத்தவர்கள் பின்பு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால் ராமசாமியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததை யாருக்கும் சொல்லாமல் மறைத்த தாய் பிச்சையம்மாள், மகன் முருகானந்தம் ஆகியோர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















