விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இதன்படி 2017 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரர், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பேட்ஸ்மேன்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 வயது அஸ்வின் 79 டெஸ்ட், 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், உலக பெண்கள் கிரிக்கெட்டிற்கு அடையாளமாக திகழ்பவர். மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். 38 வயது மிதாலி ராஜ் இதுவரை 11 டெஸ்டுகளிலும் 215 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 56-வது அரை சதத்தை மிதாலி ராஜ் பதிவு செய்தார். .
முன்னதாக மணிகா பத்ரா, ரோகித் சர்மா, வினேஷ் போகாத், ராணி ராம்பால் மற்றும் மரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு கடந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தான் முதல்முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




















