என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
ஒப்பாரி பாடல்களுக்காக பிரபலமானவர் பாடகி பாக்கியம்மா. என்ஜாய் எஞ்சாமி பாடலில் சில வரிகளை பாடியும் ஆடியும் இருந்த அவர் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. “என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை” வரிகளை இவர் பாடியிருப்பார்.
பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை சமீபத்தில் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பாடகி தீ இப்படியொரு பாரம்பரிய இசை கலைஞர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஒட்டுமொத்த என்ஜாய் எஞ்சாமி குழுவினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




















