பிரித்தானியாவில் இன்னும் 11 வாரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
ஜூலை 19-ஆம் திகதி முதல் அளிக்கப்படும், புதிய சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
வரும் திங்களன்று பெரும்பாலான கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது மிக முக்கியம் என்று டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த தொற்றுநோய் முடிந்துவிடவில்லை. ஜூலை 19 முதல் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை, அது நீடிக்கும் வரை அனுபவித்துக்கொள்ளுங்கள். வரும் செப்டம்பர் 30-க்குள் இந்த நடவடிக்கை மதிப்பாய்வு செய்யப்படும்.
கோவிட்டுக்கு முன்பு இருந்ததைப் போல ஜூலை 19, திங்கள் முதல் இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாக திரும்பிவிட நினைக்காதீர்கள்.
ரயில்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சினிமாக்கள் போன்ற பிஸியான உட்புற அமைப்புகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.
ஒர்க் பிரம் ஹோம் விதிகளை நீக்கிவிட்டாலும், ஊழியர்களை உடனடியாக அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என நிறுவனங்கள் கட்டளையிட வேண்டாம்” ” என்று கூறினார்.
குடும்பங்கள் மற்ற வீடுகளுடன் ‘தேவையற்ற சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும்’ என தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரித்துள்ளார்.
அதாவது, இன்னும் 11 வாரங்களில் நிலைமைகளைப் பொறுத்து பிரித்தானியா மீண்டும் முடக்க நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பதை பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கின்றனர்.