திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித் தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளது. அத்தோடு 235 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 131 ஆண்களும், 104 பெண்களும் அடங்குகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரைக்கும் 4 ஆயிரத்து 631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரைக்கும் 9 ஆயிரத்து 815 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 147 சிறுவர்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 375 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 248 மரணம் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















