சுபோதினி அறிக்கையின் ஊடாக வழங்கப்படவிருந்த ஆசிரியர் மற்றும் அதிபர்களின் வேதன பிரச்சினைக்கான கொடுப்பனவினை மூன்று கட்டங்களுக்குள் இல்லாமல், ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி இந்த வேதனக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 2022 ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்பட இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த தீர்மானம் தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுபோதினி குழுவின் முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் ஓயாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.