மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற சீ.சீ.ரி.வி(CCTV) காட்சி வெளியாகியுள்ளன.
குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது. குறித்த யுவதியும்,இளைஞர் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் அன்றைய தினம் வியாழக்கிழமை (11) மாலை 7 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்ட மீனவர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் பொலிஸாரும்,கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன்,எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
இரண்டாம் இணைப்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று (13) காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று (13) காலை அப்பகுதியில் உள்ள கடற்கரையோரமாகச் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மிதப்பதை அவதானித்த மக்கள் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகக் குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குறித்த சடலம் தற்போது அடையாளம் காணப்படாத நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி முழுமையான ரோஸ் நிற உடை அணிந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பிரதான பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(13) அதிகாலை இனம் காணப்பட்டுள்ளது.
மீனவர்கள் இன்றைய தினம் மீன்பிடி நடவடிக்கைக்காகக் கடற்கரை பகுதிக்குச் சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றையதினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.