நாட்டின் கடுமையான டொலர் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் பெற முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்காது என்றும் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.
கட்சியின் சிரேஷ்டர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி பாரிய நெருக்கடியாக மாறியுள்ள வேளையில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லும் போது ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வரும் என விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் கையாள்வது உத்தரவாதமாக கருதப்படலாம் என்று விக்கிரமசிங்க கூறினார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறத் தவறினால் அமெரிக்க டொலர் மதிப்பு 300 ரூபாவான உயரக்கூடும் என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.