உக்ரைனில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சத்தில் அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான போர்ப் பயிற்சியை ரஷ்யா இராணுவம் இன்று தொடங்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த மாபெரும் அணு ஆயுத போர்ப் பயிற்சியை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேரில் பார்வையிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த போர் பயிற்சியின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பயிற்சி நீண்ட காலத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டுள்ளதுடன், ரஷ்யாவிடமுள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பிற வகை ஆயுதத் தளவாடங்களின் நம்பகத் தன்மை, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான படையினர் மற்றும் அதிகாரிகளின் தயார்நிலை ஆகியவற்றைச் சோதித்துப் பார்ப்பதற்காக இந்தப் பயிற்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




















