மூதுார் தள வைத்தியசாலையில் விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர் உரிய நேரத்திற்கு வராமையால் குழந்தையை பிரசவித்த இளம் தாய் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை – பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் மூதுார் தள வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுள்ளார்.
வருகை தராத மருத்துவர்
பிரசவத்தன்று விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர் வருகை தராமையால் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் தாய்க்கு அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையும், தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிறந்தவுடனே தாயை இழந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்