பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடியாக இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலங்கை செங்கொடிச் சங்கத்தின் ஆலோசகர், மேனகா கந்தசாமி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பும் அதன் மதிப்பும் எப்போதும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றது.
இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் 1,350 ரூபாய் என்பது அவர்களின் வாழ்க்கை செலவுக்கு உகந்த ஒரு வேதனம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்து அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் வேதனம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களில் வேதன உயர்வை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தொழிலாளர்களின் வேதன உயர்வுக்கு பதில் கிடைக்கும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் எனவும் இலங்கை செங்கொடிச் சங்கத்தின் ஆலோசகர், மேனகா கந்தசாமி தெரிவித்தார்.



















