மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் விரைவாக வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களதும் ஆதரவை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன் நாட்டுக்கு அச்சுறுத்தல் என தெரிவித்த மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெரிய அரசாங்கம் தயார் என்றால் நாங்கள் தயார்.
மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். ஆனால் நாட்டில் இனவாதம், மதவாதத்தை அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரிவாக்குவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
அதனால் அரசாங்கம் தெரிவிக்கும் மக்கள் மயமான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பொதுத்தேர்தல்வரை பார்த்துக்கொண்டிருக்கமாமல் விரைவாக வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்



















