சுமார் 300 பேர் உயிரிழக்க காரணமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத சர்ச்சைக்குரிய தகவல்களை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் எழுத்து மூல சாட்சியங்களுடன் நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் முன்வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பந்தமாக இதுவரை வெளியாகிய பொய்யான தகவல்களை திருத்தவும் இதற்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டியது யார் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சாட்சியங்களை அவர்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர்கள் முதலில் சாட்சியமளிக்க உள்ளனர். இன்னும் இரண்டு வாரங்களில் இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர்.
இதன் பின்னர் இவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னர் இருவரும், ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தில் இரகசியமான வாக்குமூலங்களை வழங்க திட்டமிட்டிருந்தனர்.
தற்போது இந்த சாட்சியங்களை மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக நீதிமன்றத்தில் வழங்க தீர்மானித்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சுமார் நான்கு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.