எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியின் மொட்டுச் சின்னத்தைக் கைவிட்டு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பிலான கலந்துரையாடல் தற்போது நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிட இணக்கம் வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்கிற கூட்டணியின் கீழ் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் இவ்விரு கட்சிகளும் விருப்பம் வெளியிட்டுள்ள அதேவேளை, கூட்டணியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களும் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படுகின்ற இந்தக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச செயற்படவுள்ள அதேவேளை, தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதோடு செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அமைப்பாளர்களான அமைச்சர் விமல் வீரவன்சவும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு டாலி வீதியிலுள்ள தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய அவர், பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மொட்டுச் சின்னத்திலேயே மைத்திரி அணி போட்டியிடும் என்று கூறினார்.
“பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்து கொண்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்கிற கூட்டணியில் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம்.
இது ஸ்திரமான முடிவாகும். அடுத்தது ஒவ்வொரு மாவட்ட தொகுதிகளிலும் உள்ள வேலைத்திட்டங்களை எவ்வாறு வேட்பாளர்களாக கையாள்வார்கள் என்பதுதான் பிரச்சினை.
பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன இரண்டும் காணப்படுகின்றன. கூட்டணியாக நாங்கள் பயணிப்பத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
சில வேளைகளில் அடுத்த தேர்தல்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.
இது இன்னும் பேச்சு மட்டத்திலேயே காணப்படுகிறது. அதனால் இறுதி கருத்தாக எதனையும் அதுபற்றி இப்போது எனக்குக் கூறமுடியாது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது இன்னும் பலமான கூட்டணியாகவேதான் இருக்கின்றது” என்றார்.