லிபியாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற துருக்கி சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துருக்கியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் புறப்பட்ட சொந்தமான சரக்கு கப்பல், லிபியா தலைநகர் திரிப்போலியில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாக லிபியன் தேசிய இராணுவம் வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் கப்பல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரிப்போலி துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை ஐ.நா. லிபியா தூதர் காசன் சலேம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், துறைமுகத்தில் உள்ள கிடங்கு மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக துறைமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதே சமயம் திரிப்போலி துறைமுகத்தில் தங்கள் நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை துருக்கி மறுத்துள்ளது.
திரிப்போலி துறைமுக தாக்குதலுக்குப் பின்னர் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக லிபியாவின் ஜி.என்.ஏ அறிவித்துள்ளது.
துறைமுகத்தில் கப்பல் தீப்பிடித்து எரிந்த நிலையில் அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை எழுந்து ஆகாயத்தில் பரவிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
லிபியாவின் கட்டுப்பாட்டிற்காக ஜெனரல் கலீஃபா ஹப்தார் தலைமையிலான இராணுவத்திற்கு எதிராக போராடும் திரிப்போலியை தளமாகக் கொண்ட ஜி.என்.ஏ-வுக்கு ஆதரவாக துருக்கி படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்ட ஐ.எஸ் கைதிகள் உட்பட சிரிய கூலிப்படை போராளிகளை லிபியாவிற்கு அனுப்பியதாகவும் துருக்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.