கொவிட் – 19 (கொரோனா) வைரஸ் தொற்று தொடர்பில் லண்டனில் உள்ள பல்கலைக்கழகமொன்று நடத்திய ஆய்விலிருந்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர் வாழ்ந்து தொற்றும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடமொன்று தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது.
எனவே கையடக்கத் தொலைபேசியின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் என விஞ்ஞானிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும், கழிவறைகளிலும் அதிகம் காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.