இந்திய மாநிலம் கேரளாவில் அசுர வேகத்தில் பாய்ந்த கார் ஒன்றால் மோதப்பட்டு பாடசாலை மாணவிகள் மூவர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பூச்சக்கல் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசுர வேகத்தில் பாய்ந்த அந்த வெள்ளை நிற கார் முதலில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது மோதியுள்ளது.
தொடர்ந்து நிற்காமல் பறந்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையருகே நடந்து சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மூவர் மீது மோதி, அவர்களை அந்தரத்தில் தூக்கி வீசியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மாணவிகள் மூவரையும் மீட்டுள்ளனர்.
மொத்தம் ஆறு பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அந்த கார், பின்னர் மின் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
அதில் பயணம் செய்த இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த வினோத விபத்தானது செவ்வாய்க்கிழமை நண்பகல் நடந்துள்ளது.
காரில் இருந்த இரண்டு பேரும் மனோஜ் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மனோஜ் காரை ஓட்டி வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், பாடசாலை மாணவிகள் மூவரும் காரில் இருந்த இருவரும் என ஐந்து பேரும் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.