கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அகோரிகள் நள்ளிரவு நடத்திய பூஜையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. ஒரு புறம் இதை அறிவியல் ரீதியாக பார்த்தாலும், மறு புறம் ஒரு சிலர் இது இயற்கையின் கோபம், அதற்கு கடவுள் கொடுக்கும் தண்டனை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உலக நன்மைக்காக நள்ளிரவில் அகோரிகள் தலைகீழாக நின்று சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் காசியில் பயிற்சி பெற்ற பின் அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு தினமும் பூஜைகள் செய்து வருகிறார்.
இந்த அகோர காளி கோவிலில் விவேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற ஆரம்பித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் உலக மக்கள் மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டும் என்று நேற்று அதிகாலை வரமிளகாய் யாகம் நடத்தப்பட்டது.
நள்ளிரவில் உலக நன்மைக்காக நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இதில் அகோரிகள் உடல் முழுவதும் திருநீரு பூசிக்கொண்டு தலைகீழாக நின்று மந்திரங்கள் ஜெபித்தனர்.
அப்போது, அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதபட்டு வரமிளகாய் , நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார்.
யாகத்தின் போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.