அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும்.
கடந்த ஜனவரியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 2,556,236 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 177,437 பேர் இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7040 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவின் கொடூரமான தாக்கம் என்பது அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் 27 நாடுகளிலும், இங்கிலாந்திலும் உள்ளது. இதேபோல் அரசு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா இதுவரை போரில் கூட இவ்வளவு உயிரிழப்புகளையும் பாதிப்பை சந்தித்து இருக்குமா என்பது சந்தேகம் தான். தினமும் அடக்கம் செய்வதற்கு கூட முடியாத அளவு உடல்கள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும். நேற்று 2800 பேர் இறந்ததால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45314 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் 26,861 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,19,620 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மொத்த கொரோனா பாதிப்பில் 3ல் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்த இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 828 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 430, இத்தாலியில் 534, பிரான்ஸ் 531, ஜெர்மனி 224 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.