சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது.
மட்டுமின்றி, வைரஸ் எப்படிப் பரவியது என்பதைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்காவும் தெரிவித்தது.
ஜேர்மனி அமெரிக்கா மட்டுமின்றி கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் எகிறும் மரண எண்ணிக்கைகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவரும் ஐரோப்பிய நாடுகள் பல சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.
இந்நிலையில்தான் சீனாவிடம் 149 பில்லியன் யூரோ இழப்பீடாக கேட்டு ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.
இழப்பீடு விவகாரம் ஜேர்மனி அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ கருத்து இல்லை என்றாலும், சீனா தனது கடுமையான பாய்ச்சலைக் காட்டியிருக்கிறது.
ஜேர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரத்தொற்று நோய்க்குக் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மோசமான செயல் என்றும்,
இது அயல்நாட்டு வெறுப்பையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயல் எனவும் சீனா விமர்சித்துள்ளது.
மட்டுமின்றி கொரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதைக் கண்டறிவதற்கான அமெரிக்க விசாரணைக் குழு வருமானால் அதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறிவிட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சீன வெளியுறவுத் துறை அளித்திருக்கும் விளக்கத்தில்,
இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரி. உலகின் எப்பகுதியிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம்.
எஞ்சிய நாடுகளைப் போலவே சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சீனா குற்றவாளிகள் அல்ல. வைரஸால் பாதிக்கப் பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாகக் கூறுவது உண்மையல்ல.
அதேநேரம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா எடுத்த முன்மாதிரியான முயற்சிகளையும் அதில் கிடைத்த மதிப்புமிக்க அனுபவத்தையும் நாங்கள் உலக சமுதாயத்தின் முன்பு வெளிப்படுத்தியதற்காக எங்களைச் சர்வதேசம் பாராட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடிதான் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாறியது.
இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?” என்றும் பூமரங்காக மாறி கேள்வியைத் திருப்பிவிட்டுள்ளது சீனா.