சீனா கொரோனா வைரஸை கட்டுபடுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை வட கொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக பொதுவெளியில் வராமல் கிம் ஜாங் இருந்ததால் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த சூழலில் அவர் உர தொழிற்சாலை தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தது.
இந்நிலையில் தான் கிம் ஜாங் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு வாய்மொழியாக செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நோயை எதிர்த்து உங்கள் நாடு சிறப்பாக போராடியதற்கு வாழ்த்துக்கள்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுபடுத்தியதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜிம்பிங்குக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதோடு ஜிம்பிங் நல்ல உடல்நிலையுடன் இருக்கவும், சீனா – வடகொரியா இடையிலான உறவுகள் உறுதியாக இருக்கும் எனவும் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என வடகொரியா கூறியது.
ஆனால் முன்னர் வலுவூட்டப்பட்ட எல்லை சோதனைகள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வட கொரியா எடுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.