கருணா என்பவர் ராஜபக்ஸாக்களின் லெப்டினன்ட். எனவே இராணுவத்தினரை கொன்றதாக அவர் தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பு கூற வேண்டியது அவசியம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை மறந்துள்ளனர். இந்த நிலையில் தமிழர்களை சிங்களவர்கள் கொன்றதாகவும், சிங்களவர்களை தமிழர்கள் கொன்றதாகவும், முஸ்லிம்களை கொன்றதாகவும் மாறிமாறி தெரிவித்து பெருமை கொள்ள ஆரம்பித்தால் முடிவு என்னவாக இருக்கும்?
ஜனாதிபதியும், பிரதமரும் வேட்பாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்து வாக்கு கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இது தமிழ் மக்களின் கருத்து அல்ல. இன்று தமிழர்கள் ஆயுத போராட்டத்தை மறந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாடு என்ற கொள்கையை கைவிட்டுள்ளது மாறாக அவர்கள் ஒரே நாடு என்ற கொள்கையை ஆதரித்துள்ளனர்.
தவறியாவது நாம் அவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தால் ஆளும் கட்சியினர் நாட்டுக்கு தீ வைத்திருப்பார்கள். ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை. ஜனாதிபதியும், பிரதமரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியது அவசியம். இது ஒரு கீழ்த்தரமான அரசியல் செயற்பாடு.
இன்றைய சூழலில் மலையகம், வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். ரணிலுக்கு சிங்கள மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியாமல் போயுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு மாத்திரமே தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும்.
மிஸ்டர் சென்றல் பாங் என அடையாளப்படுத்தப்படும் ரவி கருணாநாயக்கவுக்கு ஒரு சவாலை விடுக்க விளைகின்றேன். முடிந்தால் வட கொழும்பில் வெற்றி பெற்று காட்டுங்கள் என்பதே நான் விடுக்கும் சவால்.” என கூறினார்.