தென்கொரிய தலைநகரான சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் (64) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போயிருந்த நிலையில், 7 மணித்தியால தேடுதலுக்கு பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேயர் பார்க் ஒன் சூன் உடல் சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு மேயராக தெரிவானா். பின்னர் 2018ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மேயரானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சியோல் மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மேயர் பார்க் மீது ‘மி டூ’ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென காணாமல் போனார்.
அவர் காணாமல் போன தகவலை அவரது மகள் பொலிசாருக்கு அறிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய பொலிசார், அவரது கையடக்க தொலைபேசி கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்ததை கண்டறிந்தனர். அதன்பிறகு செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சியோலின் சங்பக் மலைப்பகுதியில் பொலிஸ், தீயணைப்பு பிரிவினர் என 600 பேர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி தேடுதலுக்கு பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.



















