நல்லூர் உற்சவத்தின் போது விதிக்கப்பட்டிருந்த சில் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆலய தர்மகர்த்தா இன்று பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இந்த அவசர உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்காமல் சமூக இடைவெளியை பேணி, இடையூறுகள் எதுவும் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ள பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
உற்சவத்தின் போது ஆலய வளாகத்திற்குள் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பிரதமருக்கு ஆலய தர்மகர்த்தா இன்றைய கலந்துரையாடலில் தெளிவுப்படுத்தியிருந்தார். குறிப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆலய உற்சவத்திற்கு வருவதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த பிரதமர், இராணுவத்தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பிடத்துள்ளார்.
இதன்படி, திருவிழா நடைபெறும் நாட்களில் 50 பேர் என்ற கட்டுப்பாடுகளை நீக்கி, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை பேணி, ஆலயத்திற்கு வரும் பத்தர்களுக்கு இடையூறுகள் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ள பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி கொடியேற்றத்துடன், நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.