பிரான்சில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் Orléans நகரில் கடந்த 1-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சுமார் 250 பேர் வரை கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளி, சுகாதார நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இடம்பெற்ற இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை பிராந்திய சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், Centre-Val de Loire மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இலவச கொரோனா பரிசோதனை நடவடிக்கையின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இத்திருமணம் தொடர்பாக மொத்தம் 50 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிகளை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும், இல்லையெனில் இப்படி தான் கொரோனாவை ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் வாங்க நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.