தமிழர் தாயகப்பரப்புக்களில் எப்போதெல்லாம் அந்நியர்களது ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றதோ, அப்போதெல்லாம் அத்தகைய ஆக்கிரமிப்புக்களை தகர்ப்பதற்கு ஓர் வீரத் தமிழன் பிறப்பெடுப்பான் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 217ஆம் ஆண்டு வெற்றி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு மாவீரன் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்குக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வீரத் தமிழன் பண்டார வன்னியனின் வீர நாள் இன்றாகும்.
குறிப்பாக இங்கே அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயருடைய கோட்டைக்குள் புகுந்து பீரங்கிகளைக் கைப்பற்றிய தினம் இன்றாகும்.
தமிழர் தாயகப் பகுதிகளில் அந்நியர்களின் ஆக்கிரமிப்புகள் எப்போதெல்லாம் இடம்பெறுகின்றதோ, அப்போதெல்லாம் தமிழர்கள் அத்தகைய ஆக்கிரமிப்புக்களுக்கெதிராக போராடியிருக்கின்றனர். போராடுகின்றனர்.
இவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடிய வீரனுக்கு இன்று எமது அஞ்சலிகளைச் செலுத்தியிருக்கின்றோம்.
வரலாற்று நாளிலே இந்த இடத்திலிருந்து அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கொரு எச்சரிக்கை விடுக்கின்றேன்.
எப்போதெல்லாம் எமது முல்லைத்தீவு மண்ணிலும், எமது தமிழர் தாயக பகுதிகளிலும் உங்களுடைய ஆக்கிரமிப்புக்களைச் செய்ய முற்படுகின்றீர்களோ, அப்போதல்லாம் அத்தகைய ஆக்கிரமிப்புக்களைத் தகர்ப்பதற்கு ஒரு வீரத் தமிழன் பிறப்பெடுப்பான் என்பதை இங்கே கூறிவைத்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.



















