காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை சமைக்கும் முன்பு நீங்கள் நறுக்கும் போதும், கழுவும் போதும் அதில் உள்ள சத்துக்களை இழக்க வாய்ப்புள்ளது. அதனால் காய்கறிகளை கையாளும் விதம் பற்றி இதில் காணலாம்.
காய்கறிகளை நறுக்குவதற்கு அல்லது தோலுரிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக் கொள்வதே சிறந்த வழி. இதன் மூலம் அதில் உள்ள அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற முடியும். இதுமட்டுமல்லாமல் அதில் உள்ள வைட்டமின்கள் குறையாமலும் பார்த்துக் கொள்ள முடியும். நறுக்கிய பிறகு காய்கறிகளை கழுவினால் அதில் உள்ள நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை இழக்க நேரிடும்.
நீங்கள் பயன்படுத்தும் கத்தி கூர்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற கத்திகளை வைத்து வெட்டும் போது காய்கறிகள் சேதமடைய வாய்ப்புள்ளது. பழைய கத்தியை உபயோகிக்கும் போது அதில் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
காய்கறியின் தோலை உரிக்கும் போது மிக மெல்லிய அடுக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை இழக்காமல் வைக்க முடியும். சிலவற்றில் உள்ள தோல்களை கைகளால் உரிப்பதே நல்லது. இயந்திரத்தின் உதவியுடன் தோலுரிக்கப்படும் காய்கறிகளை விட கைகளால் அதனை உரிக்கும் போது பாக்டீரியாக்கள் எளிதில் அகற்றப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டால் அதில் அதிக பலன்கள் இருக்காது. இதனால் ஊட்டச்சத்துக்களை இழக்கும் வாய்ப்பு அதிகம். மேலும் இது வேகமாக கெட்டுப்போகக் கூடும். காய்கறிகளின் இயற்கையான நிறத்தையும் இது இழக்கச் செய்யலாம். அதனால் நீங்கள் காய்கறிகளை சேமித்து வைக்க திட்டமிட்டால், அதனை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அனைத்து காய்கறிகளையும் வெட்டவோ, தோல் உரிக்கவோ அவசியமில்லை. வெள்ளரி, தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை தோல் உரிக்காமல் கூட சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.