அமெரிக்காவில் 12 வயது சிறுமி பெற்றோரின் அலட்சியத்தின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில், 12 வயது சிறுமி ஒருவர் ஒட்டுண்ணி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கைட்லின் யோஸ்வியாக் என்கிற சிறுமி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், ஒட்டுண்ணி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் தீவிர ரத்த சோகையால் பீடிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் சிறுமியின் உயிரிழப்புக்கு மருத்துவ அலட்சியமே காரணம் என தெரியவந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்களான ஜோயி யோஸ்வியாக்கும், மேரி கேத்ரினும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணம் குறித்து ஐவி காவல்துறைத் தலைவர் உண்டிமோதி ராபி மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஜார்ஜியா பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி ரியான் ஹில்டன் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி கடந்த பிப்ரவரி முதல் பள்ளிக்கு செல்லவில்லை. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சிறுமி மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், மேலும், சிறுமி உயிரிழந்த பின்னரும் கூட பெற்றோர் அவளின் உடலுடன் வசித்து வந்துள்ளனர்.
முன்னதாக சிறுமியை தத்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக அறியப்படுகின்றது. ஆனால், இறுதி நேரத்தில் பெற்றோர்களின் மன மாற்றத்திற்கு பிறகு இந்த முயற்சி கைவிடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.