இலங்கையில் இரண்டாவது அலையாக வீரியம் பெற்றுள்ள கொரோனாத் தொற்று மிக வேகமான சமூகத் தொற்றாக மாற்றமடைந்துவருகின்றது.
மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேலியகொட மீன்சந்தைக்கு சென்றுவந்த 25 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தாமாக முன்வந்து தம்மை அடையாளம் காட்டியே தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களே தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை உட்பட்ட பல பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உட்படுவதற்கு தயக்கம் காட்டும் பல தொழிலாளர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும் தாம் வேறு மீன் சந்தைகளுக்கே சென்றுவருவதாகவும் சொல்வதாக நம்பகரமாக தெரியவருகிறது.
எனவே அவர்களை சார்ந்திருப்பவர்களோ, அல்லது அவர்களது கிராம மக்களோ உங்கள் பகுதிகளிலிருந்து மீன் ஏற்றும் வாகனங்களுடன் தென்னிலங்கைக்கு சென்று திரும்பியதாக அறிந்தால் உங்கள் பகுதி சுகாதார உத்தியோகத்தர்களுக்கோ பொலிஸாருக்கோ தெரியப்படுத்துவதால் அவர்களையும் எங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து சென்றவர்களை தாக்கிய கொரோனா ஏனைய மாவட்டங்களிலிருந்து சென்று திரும்பியவர்களை விட்டுவைத்திருக்கும் என்று எண்ண முடியாது என்கின்றனர் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள்.
பேலியகொட மீன்சந்தைக்கு வடக்கு – கிழக்கிலிருந்து நாளாந்தம் ஐம்பதற்கும் மேற்பட்ட மீன் ஏற்றும் கூலர் வாகனங்கள் சென்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை
திருகோணமலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் 06இற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை பொதுச் சந்தை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் மூடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 59 பேரிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நபர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மூவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உப்புவெளி மற்றும் புல்மோட்டை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகியோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திருகோணமலை மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.