மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரனின் விசமிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது கொலையை கண்டித்தும், அவரது படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், முன்னெடுத்திருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவி பிரதேசச் செயலாளர், மாந்தை மேற்கு பிரதேசச் செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பதாதைகளில் அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா?, கொலையாளி யார்? விசாரணையை துரிதப்படுத்துங்கள், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், கிராம அலுவலகர் விஜியேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகரின் மரணம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைக்காரர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தியோகத்தர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பை கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் கடந்த 3ஆம் திகதி கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















