மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நாளை நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை அதிகாலை 5:00 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும். எனினும் சில பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் சிலவற்றை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த இடங்களில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொடயில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மேல் மாகாணம் முழுவதும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து, நாட்டை முழுமையான செயற்பாட்டுக்கு கொண்டு வருவதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















