இதுவரை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி, ரஷ்யா உருவாக்கி உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிதான் என வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி 91.4 சதவீதம் செயற்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது.
இதனிடையே இதுகுறித்து நிக்கோலஸ் மடுரோ கூறுகையில், ‘மற்ற கொரோனா தடுப்பூசிகளால், 4 மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். ஆனால், ஸ்புட்னிக் தடுப்பூசியால் 2 ஆண்டுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்று அதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.
சோவியத் ஒன்றியம் உருவாக்கிய தடுப்பூசிகள், உலகம் முழுவதும் தீவிர நோய்களை குணப்படுத்தி உள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வாரிசான ரஷ்யாவும் அதே அனுபவத்தை பயன்படுத்தி, இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. வெனிசுவேலா மக்களுக்கு போடுவதற்காக, ஏப்ரல் மாதம் ஸ்புட்னிக் தடுப்பூசி கிடைக்கும்’ என கூறினார்.