வவுனியா மரக்கரி மொத்த விற்பனை சந்தையில் இருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வவுனியா மாவட்ட விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நந்தன் தெரிவித்தார்.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள மரக்கரி மொத்த விற்பனை நிலையத்தில் இன்று காலை இருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகளை மறுத்து அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
காலையில் மரக்கரி சந்தைக்கு வருபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் வெப்ப பரிசோதனையின் போது சந்தை தொகுதியில் வர்த்தக நிலையத்தினை வைத்துள்ள இருவருக்கு வெப்பம் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர்களை நாம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்பி மீண்டும் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த போது சாதாரண வெப்பநிலையே பதிவாகியிருந்தமை எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே வதந்திகளை நம்பி அன்றாடம் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளும் விவசாயிகள் தமது பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதனை நிறுத்த தேவையில்லை என தெரிவித்ததுடன் தமது உற்பத்தி பொருட்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தையில் விற்பனை செய்ய வருமாறும் அவர் தெரிவித்தார்.


















