கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தொடர்புகொண்டு வினவிய பொழுது – தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் கொறடா பதவியில் இருந்து வெளியேறியமை உண்மை என தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணத்தை வெளியிட்ட அவர்,
தான் கடந்த 5 வருடமாக குறித்த பதவியில் இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லை.
அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை உருவாக்கி வருகிறார்கள்.
ஆகவே அவ்வாறானதொரு பதவி எனக்குத் தேவை இல்லை என்று அப் பதவியில் இருந்து வெளியேறி உள்ளேன்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனிடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளேன் என்றார்.



















