நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசின் முகவர்களாகச் செயற்படும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச நீதி கோருதல் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
கடந்த காலங்களில் கூட்டமைப்பினர் இலங்கை அரசை அனைத்துலக விசாரணையிலிருந்து காப்பாற்றி ஐ.நாவில் கொலையாளிகளை நீதிபதிகளாகச் சித்தரித்து உள்ளக விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கி அதற்கான கால அவகாசத்தைக் கொடுத்து முற்று முழுதாக சிங்கள அரசைப் பாதுகாத்தது யாவரும் அறிந்ததே.
தற்போது இதே கூட்டமைப்பு கோட்டா அரசைப் பாதுகாக்கும் நோக்குடன் மீண்டும் காலக்கெடு எனும் வாசகத்துடன் உயர் மட்ட தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
வரும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் எந்த ஒரு தீர்மானமும் எடுக்க நாம் சம்மதிக்கப் போவதில்லை.
கடந்த தேர்தலில்”சர்வதேச விசாரணையை வலியுறுத்தக் கூடிய இரண்டு பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கூட்டமைப்பு எந்த ஒரு தீர்மானமும் எடுக்க நாம் சம்மதிக்கப்போவது இல்லை.
அவ்வாறு கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு முண்டி அடித்துக்கொண்டு செல்வதாக இருந்தால் நாம் கடும் நடவடிக்கையை சர்வதேச அளவில் எடுப்போம்.
கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தும் பாரிய வேதனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஆளான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நூற்றுக் கணக்கில் இறந்து போனதன் பின்னணியில் கூட்டமைப்பே உள்ளது .
கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் தோல்வியைச் சந்தித்து தமது நாடாளுமன்ற ஆசனங்களை இழந்து மற்றவர்களின் ஆசனங்களைத் திருடியது யாவரும் அறிந்ததே.
அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மைக் காட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைப்பாடு தற்பொழுது மக்கள் மற்றவர்களைத் தெரிந்தெடுத்ததன் மூலமாக உடைக்கப்பட்டு இருக்கின்றது.
இனிமேல் தமிழ் மக்கள் சார்பில் அவர்களாக இந்த முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என்கின்ற நிதர்சனத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கமும் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இனவழிப்பு செய்த இலங்கையை நீதி கோரும் செயல் தமிழின மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவது ஆகும். எனவே தயவு செய்து மக்களே நீங்கள் விழிப்படையுங்கள்.
அதுமட்டுமன்றி ஐ.நா மனித உரிமை பேரவையில் எந்த ஒரு தரப்பாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை முன் வைப்பதாக இருந்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பைத் தொடர்புகொண்டு அவர்களின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்து தீர்மானங்களை முன் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
அப்படிச் செய்ய மறுக்கும் பட்சத்தில் எங்களுக்கு என்ன தேவை என்ற விடயத்தை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்? எந்த தரப்பாக இருந்தாலும் எம்முடன் கலந்தாலோசிக்காது எம்மைப் பற்றிய ஒரு முடிவு எடுப்பதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம் என்பதனையும் இங்குத் தெளிவுபடுத்துகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




















