பிரித்தானியா மற்றும் பிற நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரபியல் மாற்றமடைந்த வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ்-க்கு எதிராக Pfizer மற்றும் Moderna தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை சோதிப்பதாக அறிவித்துள்ளனர்.
தற்போது வரை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்-க்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இரண்டே இரண்டு தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது, அவை Pfizer மற்றும் Moderna உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுவரையிலான தரவின் அடிப்படையில், சமீபத்தில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ்-க்கு எதிராக மாடர்னா தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மாடர்னா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்த எதிர்வரும் வாரங்களில் கூடுதல் சோதனைகளை நாங்கள் செய்வோம் என மாடர்னா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல் Pfizer நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் தடுப்பூசி மூலம் நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்ட மக்களிடமிருந்து இரத்த மாதிரிகளை எடுத்த, அதை கொண்டு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவை எப்படி தடுக்க முடியும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இதற்கு முன்பு மரபியல் மாற்றமடைந்துள்ளது, மேலும் Pfizer மற்றும் Moderna இரு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசிகள் வைரஸின் பிற மாறுபாடுகளுக்கு எதிராக செயல்படுவதைக் கண்டறிந்ததாகக் கூறுகின்றன.
அதேசமயம் புதிய கொரேனானா வைரஸ், தடுப்பூசியின் செயல்திறனை ஓரளவு குறைக்கக்கூடும் என்ற கவலை இருப்பதாக புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை ஆய்வு செய்யும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.