பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது.
பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும்,கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது. இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. அத்தகைய நன்மை கொண்ட பயறை வைத்து சுசியம் செய்து எப்படி சுவைக்கலாம் என்று தெரி்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பயறு – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி
மைதா மாவு – 3/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பயறை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
சூடான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு பொடி செய்த வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, வெல்லம் உருகி கரையும் வரை கிளறவும்.
வெல்லம் நன்கு உருகி சிறிது பாகு பதம் வந்தவுடன், அதனுடன் வேக வைத்த கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வெல்லப்பாகில் பயறு மற்றும் தேங்காய் துருவல் நன்கு கலந்து வரும்வரை வேகவிடவும்.
பின் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும்.
சுசியம் அல்லது சுகியன் செய்வதற்கு தேவையான பூரணம் தயார்.
மைதா மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஊற்றும் பதத்தில் மாவாகக் கலந்து கொள்ளவும். பூரணம் ஆறிய பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவைக்கவும். பூரண உருண்டைகளை மைதா மாவு கலவையில் இட்டு, நன்கு மூடும் வரை பிரட்டிய பின், சூடான எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த சுசியம் தயார்.



















