சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களில் இருக்கை முன்பதிவு வசதி உள்ள ரயில்களுக்கு, தற்போது அந்த வசதி இணையம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
“புத்தாண்டு சிறப்பு இரவு தபால் ரயில் (New Year Special Night Mail Train) என்ற பெயரில் ஒரு சிறப்பு ரயிலை ஆரம்பிக்கிறோம். இது கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இயக்கப்படும். இந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 7:30 மணிக்கு புறப்படும். இது ஏப்ரல் 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இயக்கப்படும். அதே நேரத்தில், இதற்கு இணைந்ததாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது. புத்தாண்டு காலத்தில் காலியில் இருந்து அனுராதபுரம் வரை ஒரு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம். காலியில் இருந்து காலை 4:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இயக்கப்படும். ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரை மாலை 3:00 மணிக்கு ஒரு ரயிலை இயக்குகிறோம். அதேபோல், ஏப்ரல் 11, 12, 16 மற்றும் 21 ஆகிய திகதிகளில் காலியில் இருந்து காலை 6:10 மணிக்கு கொழும்பு கோட்டை வரை ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை, கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த வரை சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.