பிரித்தானியா நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை, பைஸர் மருந்தின் ஒரு டோஸ் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உருமாறி தீவிரமாக பரவி வருகிறது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், அப்படியே ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை, பைஸர் மருந்தின் ஒரு டோஸ் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அது கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது.
அறிகுறிகளற்ற நோய் பரவலையும் தடுக்கின்றது என்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக, இஸ்ரேலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலக நாடுகளின் பல தரவுகள் ஆராயப்பட்டதன் முடிவில், அனைத்து தரப்பு வயதினருக்கும் பைஸர் கரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாகவும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் ஜர்னல் ஆப் மெடிசின் நடத்திய மருத்துவ பரிசோதனையிலும் பைஸர் கரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.