கல்விக்காக சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 வயதான வினுல் கருணாரத்ன எனும் இலங்கை இளைஞர் குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தற்போது மெல்பேர்னில் வசித்து வரும் இலங்கை இளைஞர், கல்வி பயிலும் போது, இரவு நேரத்தில் தற்காலிகமாக ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.
ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வருமானம் நன்றாக இருந்ததால், பின்னர் நாட்டில் உள்ள பிரபல இணையத்தளமான Airtaskerயில் சேர்ந்தார்.
தற்போது, அந்த இணையத்தளத்துடன் தொடர்பு கொண்டு அதிகம் பணம் ஈட்டுபவர்களில் முதல் 10 இடங்களில் வினுலும் உள்ளார். அவரது தினசரி வருமானம் 1,000-1,400 அவுஸ்திரேலிய டொலர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதன் ஊடாக அவர் கனவு கண்டு வந்த காரை வாங்கியுள்ளதுடன், இலங்கையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டையும் நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
மேலும் அந்த வேலைக்காக முழு நேரமும் உழைத்து வரும் வினுல், அங்கு வீடு வாங்கி மற்ற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.