வெயில் காலம் வந்து விட்டாலே பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு, சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுமையான வலி ஏற்படும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும், அப்படி சிறுநீர் கழித்தாலும் சொட்டு சொட்டாக மட்டுமே சிறுநீர் வெளியேறும்.
லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும், இதற்கு முக்கிய காரணம் தேவையான அளவு தண்ணீர் குடிக்காததே, பொதுவாக நாம் தண்ணீர் அருந்தும் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாக படிந்து விடும்.
இதன் விளைவுதான் நீர்க்கடுப்பாக மாறுகிறது. நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகி விடும். எனவே தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
இதனை சரிசெய்யும் கஷாயம் செய்யும் முறை
வெந்தயக் கீரை. – ஒரு கைப்பிடி
சீரகம். – 10 கிராம்
மஞ்சள் தூள். – இரண்டு சிட்டிகை
முதலில் வெந்தயக் கீரையை எடுத்து ஆய்ந்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் வெந்தயக் கீரை , சீரகம் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிக்க வைத்து 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும், காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.